திருச்சிற்றம்பலம்
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திரு ஆலவாயன் திருநீறே.
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புண்மைதவிர்ப்பது நீறு
ஓதத்தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திரு ஆலவாயன் திருநீறே.
முத்தி தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந் தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தமாதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே.
அருத்தமதவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தமதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே
எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே
இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணமாவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணமாவது நீறு தத்துவமாவது நீறு
அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலமது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண் திகைப்பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.
ஆற்றல் அடல்விடையேறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடல் உற்ற திப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment