திருச்சிற்றம்பலம் |
| நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க |
| இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க |
| கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க |
| ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க |
| ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க |
| வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க |
| பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க |
| புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க |
| கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க |
| சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10 |
| ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி |
| தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி |
| நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி |
| மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி |
| சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி 15 |
| ஆராத இன்பம் அருளும் மலை போற்றி |
| சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் |
| அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச் |
| சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை |
| முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20 |
| கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி |
| எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி |
| விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய், |
| எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர் |
| பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25 |
| புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் |
| பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் |
| கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் |
| வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் |
| செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30 |
| எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் |
| மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் |
| உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற |
| மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் |
| ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35 |
| வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா |
| பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி |
| மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே |
| எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே |
| அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40 |
| ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும் |
| ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய் |
| போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின் |
| நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே |
| மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45 |
| கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் |
| சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று |
| பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான் |
| நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த |
| மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50 |
| மறைந்திட மூடிய மாய இருளை |
| அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி |
| புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி, |
| மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை |
| மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55 |
| விலங்கு மனத்தால், விமலா உனக்கு |
| கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும் |
| நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி |
| நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி, |
| நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 |
| தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே |
| மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே |
| தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே |
| பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே |
| நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65 |
| பேராது நின்ற பெருங்கருணைப் போராறே |
| ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே |
| ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே |
| நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே |
| இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70 |
| அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய் |
| சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே |
| ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே |
| ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே |
| கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75 |
| நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே |
| போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே |
| காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே |
| ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற |
| தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80 |
| மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம் |
| தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள் |
| ஊற்றான உண்ணார் அமுதே உடையானே |
| வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப |
| ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85 |
| போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார் |
| மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே |
| கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே |
| நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே |
| தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90 |
| அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று |
| சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ் |
| சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் |
| செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப் |
| பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95 |
திருச்சிற்றம்பலம் |
No comments:
Post a Comment